ராம் குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம், விஷ்ணுவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான திரில்லர் படங்களில், இந்த படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் விஷ்ணு, இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்தர் அஸ்வினோடு நேர்காணலில் உரையாடியுள்ளார். இந்த DRS வித் ஆஷ் எபிசோடில், தனது திரைப்பயணம் பற்றியும், கிரிக்கெட் வாழ்க்கை பற்றியும் அதிகம் பகிர்ந்துகொண்டார் 

விஷ்ணு நடித்த பல படங்களின் கதைகள் பல ஹீரோக்கள் நிராகரித்த கதைகளாக தான் இருந்தது என்றும் விஷ்ணு தெரிவித்துள்ளார். ராட்சசன் படத்தின் கதையை 17 ஹீரோக்கள் மற்றும் 22 தயாரிப்பாளர்கள் நிராகரித்து அதற்குப் பிறகு தான் தன்னிடம் வந்தது என்று கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ராட்சசன் படம் தன் கையை விட்டு போனது என்றும் மீண்டும் அது தன்னைத் தேடி வந்தது என்றும் விஷ்ணு கூறியுள்ளார். பிறகு அவர் இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அதே போலத்தான் முண்டாசுப்பட்டி என்ற படத்தின் கதையும் பல ஹீரோக்களை தாண்டித்தான் இவருக்கு வந்தது என கூறி உள்ளார்.

தற்போது பிரபலமாக இருக்கும் ஒடிடி தளங்கள் பற்றி பேசிய அவர், தமிழ் சினிமாவில் அவை மிகவும் பிரபலம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது தான் என தெரிவித்துள்ளார். 

மக்களும் தியேட்டர்களுக்கு சென்று பெரிய கொண்டாட்டத்துடன் படத்தை பார்ப்பதற்கு தான் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் தான் OTT தளங்களில் அதிகம் யாரும் கவனம் செலுத்துவதில்லை என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். டீஸர் ஏற்கனவே வெளியானது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. 

விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் விஷ்ணு.