VFF எனப்படும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தன் படங்களை தயாரித்து வருகிறார் விஷால். இந்நிலையில் விஷால் பிலிம் பேக்டரியில் வேலை செய்து வரும் கணக்காளர் ரம்யா வரி செலுத்த கொடுத்த ரூ. 45 லட்சத்தை கையாடல் செய்துவிட்டார் என்று மேனேஜர் ஹரிகிருஷ்ணன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.

கணக்காளர் ரம்யா விஷால் பிலிம் பேக்டரியில் 6 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் மீது பணம் கையாடல் புகார் அளிக்கப்பட்டது. வரி செலுத்த விஷால் அளித்த பணத்தை ரம்யா தன் சொந்த வங்கி கணக்கு மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புகார் அளிக்கப்பட்ட வேகத்தில் விஷால் மேனேஜர் ஹரியின் கார் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு ஹரி கோடம்பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தால் கார் சேதப்படுத்தப்பட்டிருந்ததாம். அதை பார்த்து ஹரி கிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. காரின் அனைத்து கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ஹரி தன் கார் சேதப்படுத்தப்பட்டது குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ரம்யா மீது புகார் கொடுக்கப்பட்டதற்கும், கார் சேதப்படுத்தப்பட்டதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணம் கையாடல் புகார் கொடுக்கப்பட்டதும் ரம்யா விஷால் மீது புகார் தெரிவித்ததுடன், மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சக்ரா படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால்.