கோலிவுட்டின் பிஸியான ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார். இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து ஒரு குட்டி லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகை டாப்ஸியுடன் ஆனபெல் சுப்ரமணியம் படத்தில் நடித்து முடித்தார். 

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான லாபம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த மாதம் 800 திரைப்படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி. 

மலையாளத்தில் மார்க்கோணி மத்தாயி என்ற படத்திற்கு பின்னர் விஜய்சேதுபதி இரண்டாவதாக நடிக்கும் மலையாளப் படம் 19 (1) (a). இப்படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் கடந்த வாரம் தொடங்கியது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், நடிகை நித்யா மேனனும் படக்குழுவுடன் இணைந்தனர். வி.எஸ்.இந்து இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதியுடன் இந்திரஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கையுடன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் நாயகி நித்யா மேனனுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது. இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்ற செய்தியும் தெரியவந்துள்ளது. 

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.