தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகையான ஜெமினி ராஜேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 94. ஒப்பற்ற ஜெமினி தயாரிப்பு நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் எட்டு வயது குழந்தையான ராஜேஸ்வரி நடன கலைஞராக அறிமுகமானார். தொடர்ந்து ஜெமினி நிறுவனத்தில் பணி புரிவதால் நடிகை ராஜேஸ்வரி ராஜேஸ்வரி என அழைக்கப்பட்டார். 

ஜெமினி நிறுவனத்தின் விதிகளை மீறி வெளிநாடகங்களில் பணியாற்றியதால் ஜெமினியிலிருந்து விலக்கப்பட்டார். தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ள ஜெமினி ராஜேஸ்வரி, திரையுலகில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

குறிப்பாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்த 16 வயதினிலே படத்தில் வெள்ளையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் , “ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குறவளாச்சே” என வசனங்கள் பேசி நடிகை காந்திமதி உடன் போட்டி போட்டு இவர் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலபடுத்தியது. 

காதல் படுத்தும் பாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெமினி ராஜேஸ்வரி தொடர்ந்து சூறாவளி, பிரியா, நீர் பூத்த நெருப்பு, மண்வாசனை,நிறம் மாறாத பூக்கள் என தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் கே.பாக்யராஜின் இயக்கத்தில் வெளிவந்த சின்ன வீடு திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெமினி ராஜேஸ்வரி. 

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் 94 வயதான ஜெமினி ராஜேஸ்வரி வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். மறைந்த பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரிக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.