தமிழ் திரையுலகில் சீரான நடிகைகளுள் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். போடா போடி படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்குப் பிறகு மிகவும் போல்டான கதாபாத்திரங்களில் படங்களில் நடிக்கத் துவங்கினார். தளபதி விஜய்யுடன் சர்க்கார் படத்திலும், தனுஷுடன் மாரி 2 படத்திலும் நடித்திருந்தார். இறுதியாக வெல்வெட் நகரம் எனும் படத்தில் நடித்திருந்தார். 

தற்போது டேனி என்ற படம் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் வரலட்சுமி ஸ்டண்ட் காட்சிகளில் தானே ஈடுபட்டு நடித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. கடைசியாக யார் பார்த்தது பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. டேனி திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி நேரடியாக Zee5 தளத்தில் வெளியாகவுள்ளது. 

வரலக்ஷ்மி நடிக்கும் படங்களின் பணிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. லாக்டவுன் காரணமாக கிடைத்துள்ள இந்த நேரத்தை வரலட்சுமி தனது வீட்டிலேயே செலவழித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் பல சமூகப் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

சினிமா சார்ந்த பணிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பேக்கரி கம்பெனியை துவங்கியுள்ளார். லைஃப் ஆஃப் பை என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலமாக ஏற்கனவே வரலட்சுமி விற்பனையை துவங்கிவிட்டார். சிறு வயது முதலே பேக்கிங் செய்வதில் ஆர்வம் காட்டி வந்த அவர் தற்போது ஒரு தொழிலாகவும் தொடங்கிவிட்டார். 

இதுகுறித்து அவரது பதிவில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான் ஒரு சிறிய பேக்கிங் கம்பெனியை துவங்கினேன். லைப் ஆப் பை மூலமாக பிரஷ்ஷாக பேக் செய்யப்பட்ட சீஸ் டாட்ட்ஸ்களை செய்து கொடுக்கிறேன். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். தற்போது அது ஒரு சிறிய பிசினஸாக வளர்ந்து இருக்கிறது. தற்போது வரை நான் எதிர்பார்க்காத வகையில் 100 ஆர்டர்களை முடித்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து ஆர்டர் கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். வரலக்ஷ்மியின் இந்த தொழில் செழிப்பாக அமைய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.