திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பலத்த பாதுகாப்பு ஏன் தெரியுமா?
By Arul Valan Arasu | Galatta | August 27, 2019 11:00 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாகக் கடந்த வாரம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வழக்கத்தை விட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கு இடமான பலர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் சித்தூர் காணிப்பாக்கும் விநாயகர் கோயில் உள்ளிட்ட சில முக்கிய கோயில்களுக்கு உளவுத்துறை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கோயிலைச் சுற்றிக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பக்தர்கள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டே பிறகே, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதியிலும் வாகன சோதனையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.