பிரபல ஈழத்தமிழ் இயக்குனரான புதியவன் இராசையா மண் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து யாவும் வசப்படும் எனும் கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கிய புதியவன் இராசையாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

ஈழத்துப் போரின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இத்திரைப்படம் சமகாலத்தில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் யாரும் சொல்லத் துணியாத கதைக்கருவை தெள்ளத்தெளிவாக நகர்த்தும்  கதையாக தயாராகியுள்ளது ஒற்றைப் பனைமரம் திரைப்படம்.

புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடிப்பில், ஈழத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஒற்றைப் பனைமரம் திரைப்படம் கிட்டத்தட்ட 40 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்வாகி சிறந்த நடிகர் சிறந்த ஒளிப்பதிவு சிறந்த இசை என பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரவும் பகலும் வரும் மற்றும் போக்கிரி மன்னன் ஆகிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர் S.தணிகைவேல் முதல் முறையாக தனது R.S.S.S. பிக்சர்ஸ் சார்பாக ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்ய , அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார் மேலும் தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் 17 சர்வதேச விருதுகள் வாங்கிய ஒற்றைப் பனைமரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது .மேலும் அமேசான் பிரைம் வீடியோ நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களிலும் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.