தமிழ் திரையுலகின் சிறந்த நடிகராகவும், ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா. இன்று சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். மேலும் நடிப்பின் நாயகன் எனும் ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பணிகள் முடிவடைந்து கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு அருவா, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது. 

ஏற்கெனவே எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அசுரனாக படமாக்கிய வெற்றிமாறன் அதில் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை, தாணு தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. வேல் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க சூர்யாவை கிராமத்து ஸ்டைலில் பார்க்க ஆவலாக உள்ளனர் அவரது ரசிகர்கள். 

லாக்டவுன் முடிந்து இயல்புநிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டரில் உள்ளது போல், இந்த படத்தில் சூர்யாவின் கெட்டப் இதுதானா அல்லது வேறொரு கெட்டப் இருக்குமா என்ற ஆர்வத்திலும் உள்ளனர் திரை விரும்பிகள். வெளியான போஸ்டரிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான குறியீடுகள் உள்ளதை ரசிகர்கள் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.