இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சிம்ப்ளி ஃப்ளை என்ற புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

இந்தியத் திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் விருது பட்டியலுக்கு சூரரைப் போற்று படம் அனுப்பப்பட்டது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.

அந்த வரிசையில் பொதுப்பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது. பொதுப்பிரிவில் போட்டியிடுவதற்கு பல்வேறு நாடுகளிலிருந்து படங்கள் குவிந்தன. அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு, அதிலிருந்து இறுதிப்பட்டியலை ஆஸ்கர் குழுவினர் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

366 படங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் சூரரைப் போற்று படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இடம்பிடித்துள்ளதால் படக்குழுவினர் பெரும் உற்சாகமாகியுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள படங்களை வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்து, இறுதிப்பட்டியலை அறிவிப்பார்கள்.

ஆஸ்கர் பட்டியலில் தங்களுடைய படத்தின் பெயர் இடம்பெற்றதே, பெரிய அங்கீகாரம் என 'சூரரைப் போற்று' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

சூர்யா கைவசம் சூர்யா 40 திரைப்படம் உள்ளது. பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதன் பிறகு வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.