தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புகளை வழங்கி வரும் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெய் பீம், உடன்பிறப்பே, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் மற்றும் ஓ மை டாக் உள்ளிட்டோரை படங்கள் அடுத்தடுத்த  நான்கு மாதங்களில் ஒவ்வொன்றாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவரவுள்ளன.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் பெயரில் மோசடி நடைபெறுவதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பெயரில் போலி ஈமெயில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. 

அதில் 2டி என்டர்டெயின்மென்டின் லோகோவை பயன்படுத்தி சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ள நபர்களை நேர்காணலுக்கு அழைக்கும் படியாக ஈமெயில்கள் மூலம் பண மோசடி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் விளக்கமளித்துள்ளது. இந்த போலி ஈமெயில் கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.