கடந்த மாதம் ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகம் என்றே கூறலாம். 

அவர் மீண்டும் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று திரையுலக பிரபலங்களும் கோடானகோடி ரசிகர்களும் சமீபத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து ஒவ்வொருநாளும் தனது தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். 

இன்று எஸ்.பி.சரண் தனது தந்தையின் உடல்நிலை குறித்து தெரிவித்திருக்கும் அப்டேட்டில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது. முன்னேற்றத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

நேற்றைய முன்தினம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை விடுத்திருந்த செய்திக்குறிப்பில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.

தற்போது அவருக்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிசியோதெரபி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். மருத்துவக்குழுவினர் தொடர்ந்து எஸ்.பி.பி.யின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.