2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சூரரைப் போற்று... நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம். 

நினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது என்று பாராட்டினார். 

அமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். படத்தின் பாடல் வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது படக்குழு. கடைசியாக சூரரைப் போற்று படத்தின் ஹீரோயின் பொம்மி பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். படத்திலிருந்து நாலு நிமிஷம் பாடல் வீடியோ நேற்று வெளியானது. கிருஷ்ணராஜ் பாடிய இந்த பாடல் வரிகளை மாயா மஹாலிங்கம் எழுதியிருந்தார். 

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதில் நடிகர் மோகன் பாபு பாத்திரம் உருவான விதத்தை காண்பித்துள்ளனர். மாறா கதாபாத்திரத்துக்கு வழிகாட்டியாக இருக்கும் மிக முக்கியமான பக்தவச்சலம் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன் பாபு. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மோகன் பாபுவின் உண்மையான பெயர் பக்தவச்சலம். அவருடைய நிஜ பெயரிலேயே இந்தப் படத்தில் நடித்து அசத்தியுள்ளார். 

தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மோகன் பாபு. 70-களில் திரையுலகில் நுழைந்தவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு அல்லாது தமிழ் திரையுலகிலும் சிறந்த நடிகராக ஜொலித்தவர். சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அண்ணை ஓர் ஆலயம், கமல் ஹாசனுடன் குரு போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட ஜாம்பவானுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பேசியுள்ளார் சூர்யா.