இயக்குனர் செல்வராகவனும் நடிகர் தனுஷும் மீண்டும் இணைவது எப்போது என்பது குறித்து நீடித்த வந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் நானே வருவேன் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் இணைவதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. 

கடந்த புத்தாண்டு அன்று ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் தனுஷுடன் செல்வராகவன் இணையும் கலைப்புலி தாணு தயாரிப்பில் நானே வருவேன் படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

நானே வருவேன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளைத் தொடங்கினார் செல்வராகவன். இது தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், நானே வருவேன் படம் குறித்து செல்வராகவன் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், எந்தப் படத்திற்கும் இந்த அளவிற்கு முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டதில்லை. படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ், தற்போது தி கிரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்படத்தை முடித்துவிட்டு தனுஷ் இந்தியா திரும்பியவுடன், நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.