திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ரம்யா கிருஷ்ணன். 1983-ம் ஆண்டு வெள்ளை மனசு எனும் படத்தில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்த இவருக்கு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடித்த படையப்பா திரைப்படம் திருப்புமுனை என்றே கூறலாம். நீலாம்பரியாக கேரக்டரில் பட்டையை கிளப்பியிருப்பார் ரம்யா. அதன் பிறகு குணச்சித்திர ரோலில் நடித்து வந்தவருக்கு, பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி கதா பாத்திரம் உலகளவில் சிறந்த நடிகை எனும் அங்கீகாரத்தை பெற்று தந்தது. 

கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் ரம்யா கிருஷ்ணன், சமீபத்தில் மிகப்பெரிய சிக்கலில் மாட்டினார். சென்னை ஈசிஆரில் உள்ள கானத்தூர் அருகே இவரது கார் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த போது தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை மடக்கி சோதனையிட்டபோது,  காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டிவந்த நடிகையின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

லாக்டவுனில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், சமீபத்தில் தனது நாய் குட்டியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தனது பள்ளி குரூப் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு அதிக லைக்குகளை குவித்து வருகிறது. அப்பதிவில் நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடியுங்கள் என்று ரசிகர்களுக்கு கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு தேவ் மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களில் நடித்தாலும், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் அதிக பாராட்டுக்களை பெற்றது. கெளதம் மேனன் இயக்கிய குயின் வெப்சீரிஸிலும் அசத்தியிருந்தார். வெங்கட்  பிரபு இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த பார்ட்டி திரைப்படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வருதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.