கடந்த 2014-ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் நடிகை ராகினி திவேதி. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தார். பாலிவுட் பிரபலங்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து பேசப்படும் நிலையில் கன்னட திரையுலகிலும் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் தெரிவித்தார்.

போதைப் பொருள் பயன்பாடு குறித்து மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர். இந்திரஜித் லங்கேஷை விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்தனர். அவரும் அதிகாரிகள் முன்பு ஆஜராகி கன்னட திரையுலகில் போதைப் பொருள் பயன்படுத்தும் 15 பிரபலங்களின் பெயர்களை அளித்துள்ளார். ராகினி திவேதியும் போதைப் பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை சம்மன் அனுப்பினார்கள். 

ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் தன் வழக்கறிஞரை அனுப்பி வைத்தார். வரும் திங்கட்கிழமை அதிகாரிகள் முன்பு ஆஜராவதாக ராகினி கூறினார். இந்நிலையில் பெங்களூரில் இருக்கும் ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள். காலை 6.30 மணிக்கு சோதனை துவங்கியது. 6 ஆண் போலீஸ், ஒரு பெண் போலீஸ் ராகினி வீட்டில் போதைப் பொருள் இருக்கிறதா என்று சோதனை செய்தார்கள்.  

சோதனை நடந்தபோது ராகினி வீட்டில் தான் இருந்தார். அவர் தன் செல்போன் எண்ணை நேற்று மாற்றிவிட்டார். இதையடுத்து அவர் வீட்டில் சோதனை நடத்த மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு பெற்றார்கள். அதன் பிறகே அவர்கள் இன்று ராகினியின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். கர்நாடக மாநிலத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த பலரை போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்தார்கள். அதில் ஒருவரின் டைரியில், கன்னட திரையுலகை சேர்ந்த 15 பேரின் பெயர்கள் இருந்தது.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ராகினியின் நண்பர் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் போதைப் பொருள் விவகாரத்தில் ராகினிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

முன்னதாக அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராவது குறித்து ராகினி சமூக வலைதளத்தில் கூறியதாவது, மத்திய குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் முன்பு என்னால் ஆஜராக முடியாமல் போனது. என்னால் ஆஜராக முடியாமல் போனதற்கான காரணத்தை என் வழக்கறிஞர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். திங்கட்கிழமை காலை நான் போலீசார் முன்பு ஆஜராவேன். 

என்னிடம் மறைக்க ஒன்றும் இல்லை. மத்திய குற்றப் பிரவு போலீசார் விசாரணை செய்து வரும் சட்டவிரோதமான நடவடிக்கையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.