உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் அவர்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். 

Raghava Lawrance

அதில், நிவாரணநிதிக்கு நான் அளித்த பங்களிப்பிற்கு எனக்கு வாழ்த்துக்களைக் கூறிய நண்பர்கள், ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரும் நன்றி. உங்கள் அனைவரின் அன்பு என்னை மூழ்கடித்துவிட்டது. இந்த நன்கொடைக்குப் பிறகு ஸ்டன்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பலர் இன்னும் உதவிகள் செய்யுமாறு  என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். பொதுமக்களிடம் இருந்தும் எனக்கு கடிதங்கள், வீடியோக்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் பார்க்கம் போது எனக்கு இதயமே நொறுங்கிவிடுவது போல் இருந்தது.

அவை அனைத்திற்கும் நான் தந்த 3 கோடி ரூபாய் போதாது. எனவே, நியாயமாக என்னுடைய உதவியாளர்களிடம், என்னால் இதற்கு மேல் தர இயலாது எனவே நான் பிஸியாக இருப்பதாகச் சொல்லிவிடுங்கள் என்றேன். என்னுடைய அறைக்குச் சென்று இது பற்றி யோசித்துப் பார்த்தேன். நான் செய்தது பற்றி உண்மையில் வருத்தப்பட்டேன். நேற்று இரவு என்னால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. பொதுமக்கள் அழுவது பற்றிய வீடியோக்கள் என்னை மிகவும் பாதித்தது.

அதைப் பற்றி ஆழமாக யோசித்தபோது, இந்த உலகத்திற்குள் வரும் போது நாம் எதையும் கொண்டு வரவில்லை, போகும் போதும் எதுவும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. அனைத்து கோயில்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பசியில் கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில், கடவுளிடம் கொடுக்கும் போது அது மக்களுக்குப் போய்ச் சேராது. ஆனால், மக்களுக்குக் கொடுக்கும் போது அது கடவுளிடம் போய்ச் சேரும். ஏனென்றால் கடவுள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். கடவுள் என்னை வீட்டில் உட்கார வைத்திருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் என்னை சேவை செய்வதற்கான வேலையைக் கொடுத்திருக்கிறார். 

RaghavaLawrance

இது அனைவருக்கும் ஒரு கடினமான காலகட்டம். எனவே, சேவை செய்வதற்கு இதுதான் சரியான தருணம். எனவே, மக்களுக்கும், அரசுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளேன். இப்போது நான் கொடுத்த 3 கோடி இல்லாமல் மேலும் எனது ஆடிட்டர் மற்றும் என் நலம்விரும்பிகளுடனும்,  உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் நான் என்ன செய்ய போகிறேன் என்று கலந்து பேச உள்ளேன். அது என்னவென்று இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறேன் என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.