2 குழந்தைகளுடன் தீ குளித்த தாய்!
By Arul Valan Arasu | Galatta | September 18, 2019 16:00 PM IST
புதுக்கோட்டையில் 2 குழந்தைகளுடன் தாய் தீ குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை அடுத்த இலுப்பூர், கோட்டை தெருவைச் சேர்ந்த மணிகண்டன் - ராஜலெட்சுமி தம்பதியினருக்கு நந்தினி என்ற மூன்றரை வயது மகளும், தாரணி ஸ்ரீ என்ற 11 மாத குழந்தையும் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக மணிகண்டன் வேலையில்லாமல் இருந்த நிலையில், தொழில் தொடங்க தனது தாயாரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தர மறுக்கவே, வேலைக்காகத் திருப்பூர் போவதாகவும், இனி ஊருக்கு வரமாட்டேன் என்று, தனது தாயாரிடமும், மனைவியிடமும் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இதனால், மனமுடைந்த மணிகண்டன் மனைவி ராஜலெட்சுமி, தன்னால்தான் தனது கணவரும் சிரமப்படுகிறார் என்று கூறிக்கொண்டு, தனது 2 குழந்தைகளையும் வீட்டிற்குள் வைத்து உள் பக்கமாகக் கதவை தாளிட்டுகொண்டார். இதனையடுத்து, தன் மீதும் தனது 2 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு, தீ வைத்துக் கொண்டார்.
இதில், குழந்தைகள் உட்பட 3 பேரும் தீயில் எரியத் தொடங்கிய நிலையில், 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, 2 குழந்தைகள் உட்பட 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.