தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலுங்கின் முன்னணி நடிகராக விளங்கும் பவன் கல்யாணின் இந்தி பிங்க் ரீமேக்கான வக்கீல் சாப் திரைப்படம் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

பட வெளியீட்டு தொடர்பான கூட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்ட பவன் கல்யான் சமீபத்தில்தான் தனது உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று அறிவித்தார். இந்நிலையில், லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்த பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது மருத்துவர்களின் முழு ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்து வருகிறார். அந்தப் புகைப்படங்களும் அவரது அறிக்கையையும் அவரது ஜனசேனா கட்சியின் குழு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார் பவன் கல்யாண். 

ஆனால், சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தபோது, அதில் மாற்றுக்கருத்து ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜன சேனா என்ற கட்சியை ஏற்படுத்தி முழுநேர அரசியல்வாதியாய் மாறினார். ஆனால், அவர் நினைத்தது போல் அரசியல் வெற்றிகரமாக அமையவில்லை.அதனால், மீண்டும் தற்போது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.