தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்ப்பட்டாளத்தை கொண்டுள்ளவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.கடைசியாக 2018-ல் வெளியான Agnyaathavaasi படத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து ஜன சேனா பார்ட்டியில் முழுவதுமாக ஈடுபட்டுவருகிறார்.2019 லோக்சபா தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் இரண்டு இடங்களில் போட்டியிட்டார்.

ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் PINK.அமிதாப் பச்சன்,டாப்சீ முன்னணி வேடங்களில் நடித்திருந்த இந்த படம் கடந்த ஆண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் தல அஜித்,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,வித்யா பாலன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பவன் கல்யாண் ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.நிவேதா தாமஸ்,அஞ்சலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு வக்கீல் சாப் என்று பெயரிட்டுள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் அப்டேட்கள் வெளிவராமல் இருந்தன.கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்,இது தவிர பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த சில படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது.

பவன் கல்யாணுக்கு உலகம் முழுவதும் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர் , மற்றும் பல பிரபலங்களும் இவரது ரசிகர்களாக உள்ளனர்.இவருக்கு ஏராளமான ரசிகர்களும்,பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் அவர்களுக்கு பவன் கல்யாண் தன்னால் முடிந்த வரை பதிலளித்து வந்தார்.சிவகார்த்திகேயனும் பவன் கல்யாணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.இதற்கு நேற்றிரவு பதிலளித்த பவன் கல்யாண் ,பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி, நீங்கள் இன்னும் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகள் என்று தெரிவித்த அவர்,உங்களது ஊதா கலரு ரிப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்,கணக்கில்லாமல் அந்த பாடலை பல முறை பார்த்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி , அந்த பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.பவன் கல்யாணின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.மேலும் சிவகார்த்திகேயன் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.அதோடு ட்விட்டரில் பவன் கல்யாண் பின்தொடரும் ஒரே தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் தான்.இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில் சிவகார்த்திகேயன் , பவன் கல்யாணுடன் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.