ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

p Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, நேற்று இரவு அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, ப.சிதம்பரத்திடம் முதல்கட்ட விசாரணையை நடத்திவிட்டு, இன்று டெல்லியில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் இரு தரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டன.

வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, 5 நாட்கள் ப.சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன் மூலம், ப.சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், ப.சிதம்பரத்தின் காவல் முடிந்ததும், வரும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை ஆஜர்படுத்த வேண்டும் என்று சிபிஐக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

p Chidambaram

இதனிடையே ப.சிதம்பரத்தை, அவரது குடும்ப உறுப்பினர்கள் தினமும் 30 நிமிடங்கள் சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து, சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அதன்படி, இன்று இரவிலிருந்தே விசாரணை தொடங்கும் என சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.