நளினிக்கு 3 வாரங்கள் பரோல் நீட்டிப்பு ஏன்?
By Arul Valan Arasu | Galatta | August 22, 2019 17:41 PM IST
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த நளினிக்கு 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நளினி, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய மகள் திருமண ஏற்பாடுகளைச் செய்ய 6 மாதங்கள் பரோல் வழங்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நளினியின் பரோல் மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறை விதிகளின் படி ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்க முடியும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்டு, மகள் திருமணத்திற்காக ஒருமாத காலம் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
அதன்படி பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜீலை 25 ஆம் தேதி நளினி, பரோலில் வெளியே வந்தார். வேலூர் மாவட்ட சத்துவாச்சாரியில் தங்கியிருந்து, தனது மகள் திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வரும் அவர், மகளின் திருமண ஏற்பாடுகள் கால தாமதம் ஆவதால், மேலும் ஒரு மாதத்திற்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நளினிக்கு மேலும் 3 வாரக் காலம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டனர்.