தேர்ந்த நடிகராக இந்திய திரை உலகின் பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் மாதவன் முதல் முறையாக தயாரித்து இயக்கி நடித்து வெளிவந்த ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படம் உலகம் முழுக்க பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணன் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 

முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ராக்கெட்ரி திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் மாதவன் மற்றும் படக்குழுவினரை எழுந்து நின்று பாராட்டினர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ராக்கெட்ரி திரைப்படம் தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவிலும் தொடர்ந்து பல லட்சம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ராக்கெட்ரி திரைப்படத்தை தயாரிப்பதற்காக நடிகர் மாதவன் தனது வீட்டை இழந்ததாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த செய்திகள் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் மாதவன் இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ராக்கெட்ரி திரைப்படத்தை தயாரிப்பதற்காக தனது வீடு அல்லது வேறு எதையும் நான் இழக்கவில்லை… இந்த படத்திற்காக முதலீடு செய்தது பெரிய லாபத்தை கொடுத்தது இப்போதும் மிகுந்த மகிழ்ச்சியோடு எனது வீட்டில் தான் இருக்கிறேன்" என நடிகர் மாதவன் குறிப்பிட்டுள்ளார். மாதவனின் அந்த பதிவு இதோ…
 

Oh Yaar. Pls don’t over patronize my sacrifice. I did not lose my house or anything. In fact all involved in Rocketry will be very proudly paying heavy Income Tax this year. Gods grace 😃😃🙏🙏🇮🇳🇮🇳🇮🇳We all made very good and proud profits. I still love and live in my house .🚀❤️ https://t.co/5L0h4iBert

— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 17, 2022