தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் சுரேஷ் காமாட்சி. தற்போது STR நடிக்கும் மாநாடு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர். 

சென்ற லாக்டவுனில் இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதில், அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்...தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் லைவ்வில் தோன்றிய இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் ஷூட்டிங் பற்றியும், முதல் பாடல் பற்றியும் பேசியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிக நபர்களை கொண்டுள்ளதால், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் அதிக நபர்கள் தேவை படுகிறது என்று கூறியிருந்தார். ஒரு மாநாட்டில் நடக்கும் கதை என்பதால், அதற்கு ஏற்றார் போல் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த வேண்டும். தற்போது உள்ள சூழலில் சமூக இடைவெளி மிகவும் அவசியம். அதனால் அரசு அனுமதித்த பிறகே, இயல்பு நிலை திரும்பியவுடன் மாநாடு படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் முதல் பாடல் ரெடி. மதன் கார்க்கியின் வரிகளில் முதல் பாடல் சிறப்பாக வந்துள்ளது எனவும் கூறியிருந்தார். 

சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செய்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது உள்ள ட்ரெண்டில், நடிகர் நடிகையர்கள் அனைவரும் இந்த போட்டோஷூட் கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். இதே ஃபார்முலாவை கையில் எடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை பாராட்டினர் இணையவாசிகள். மேலும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என்ற நற்செய்தியையும் தெரிவித்தார் தயாரிப்பாளர். 

இந்நிலையில் சினிமா நடிகர்களின் அரசியல் பயணம் குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி. அவர் செய்த பதிவில், சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க?? என்று குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவின் கீழ் தங்களது கமெண்ட்டுகளை அடுக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.