மாநகரம், கைதி, மாஸ்டர் & விக்ரம் என ரசிகர்கள் விரும்பும் அதிரடி ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து இந்திய திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து தயாராகிறது தளபதி 67. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு தற்போது தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கு  ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில், விரைவில் தளபதி 67 படத்தை அறிவிக்கும் அறிவிப்பு வீடியோ வெளியாகும் எனவும் அதைத்தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகள் வரிசையாக வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தளபதி விஜயின் வாரிசு பட ரிலீசுக்கு பிறகு வரிசையாக அறிவிப்புகள் வரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் நடைபெற்ற தமிழ் சினிமா ROUND TABLE 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பேசும்போது, “நான் மாஸ்டரில் கமிட் ஆகும்போது மாநகரம் மட்டும் தான் ரிலீஸாகியிருந்தது. கைதி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த மாஸ்டர் கதையை எழுதி கொடுத்து விட முடியுமா என்பது கூட தெரியுமா தெரியாதா என்று கூட தெரியாத நிலையில் தான் இருந்தேன். விஜய் அண்ணா மாதிரி ஒரு பெரிய ஸ்டாரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது… என்னுடைய ஒரே அடையாளம் மாநகரம் மட்டும்தான். அப்போது இதை செய்யலாமா வேண்டாமா என யோசிப்பதை விட, இதை எப்படி கைவிடுவது என்று மட்டும் தான் இருந்தது. எனவே பரவாயில்லை முயற்சி செய்து பார்ப்போம் என எழுதினேன். அந்த 4-5 மாதங்களுக்குள் என்னால் என்ன முடியுமோ அதை செய்துவிடலாம் என்று இருந்தேன். அப்போது அந்த தயாரிப்பாளருக்கு தேவையாக இருந்தது ஒரு நல்ல கமர்சியல் ஆக்சன் திரைப்படம். அதை எப்படி செய்யலாம் என யோசிக்கும் போது இதை 100% என் பாணியில் எழுத முடியாது. ஏனென்றால் முன்பு எழுதிய கதைகள் எல்லாம் ரொம்ப நாட்கள் எழுதி இருப்பேன் ஒரு வருடம் கூட ஆகியிருக்கும், இப்போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் என வரும் பொழுது அதை நான் சவாலாக தான் எடுத்துக் கொண்டேன். நானும் பாடல்கள் எல்லாம் வைத்து ஒரு படம் எடுத்தால் அது எப்படி இருக்கும் என முயற்சி செய்தது தான். அப்படிதான் 50-50 என வந்தது 50% அவருடைய கமர்சியல் விஷயங்கள் வைத்து ஒரு படம் கொடுக்கலாம் என முடிவெடுத்தேன். அதற்கிடையில் கைதி திரைப்படம் ரிலீஸ் ஆனது. பின்னர் மாஸ்டர் படத்தின் போது கோவிட் வந்தது. கோவிட்க்கு உண்மையில் நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கோவிட் மட்டும் இல்லை என்றால் மீண்டும் அதே நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என மாட்டியிருப்பேன். இந்த முறை கமல்ஹாசன் சார் கூப்பிட்டு செய்யும் பொழுது எனக்கு அந்த நேரம் கிடைத்தது. அவரிடம் சொல்லிவிட்டு 8 மாதங்கள் நேரம் எடுத்துக்கொண்ட பிறகுதான் என்னால் விக்ரம் எழுத முடிந்தது. இப்போது அது முடிந்து நான் செய்யும் அடுத்த படம் (தளபதி 67) அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் என்னால் பண்ண முடியும் என சொல்லவில்லை. இப்போது இந்த ஸ்டார்கள் எல்லாம் தெரிந்த பிறகு அவர்களுடன் மிகுந்த நட்போடு இருப்பதால் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என இப்போது சொல்ல முடிகிறது. கொஞ்சம் நேரம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக செய்து விடுவேன் என கேட்க முடிகிறது. இப்போது எனக்கு நேரம் கிடைத்ததனால் அடுத்து பண்ணப் போகிற படம் 50-50 கிடையாது கட்டாயமாக 100% எனது படமாக இருக்கும். சில வாய்ப்புகள் கைவிடவே முடியாத வாய்ப்புகளாக இருக்கும். அது நடப்பதற்கான காரணமே இதுவாக தான் இருக்கும். இப்போது நான் நினைத்ததை செய்ய முடியும் 100%...” என இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…