‘தி லெஜண்ட்’ திரைப்படம் விரைவில் ஒடிடி-யில் வெளியாகவிருப்பதாக அப்படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான ‘லெஜண்ட்’ சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், விளம்பரப் படங்களில் நடித்து நமக்கு பரிச்சயமானவருமான சரவணன் அருள் என்ற ‘லெஜண்ட்’ சரவணன் நடித்து கடந்த ஜூலையில் வெளியான திரைப்படம் ‘தி லெஜண்ட்’.

ஜே.டி. - ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கீதிகா திவாரி, ஊர்வசி ரவ்டாலா, விவேக், சுமன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன், படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

மாஸ் ஹீரோக்களின் படங்களைப் போல், இப்படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. லெஜண்ட் சரவணாவின் விளம்பரங்கள் மக்களிடையே அதிகம் சென்று சேர்ந்த நிலையில், அவரது படம் மீது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது மறுப்பதற்கில்லை. 

ஆரம்பத்தில் லெஜண்ட் சரவணாவின் விளம்பரப் படங்கள் மூலமாக வலைதளங்களில் அவர் அதிகம் கேலிக்கிண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது அசைவுகள், நடனம், பேச்சு என ஒவ்வொன்றிற்காகவும் அவரை ‘காமெடி கன்டென்ட்’ ஆக்கி நெட்டிசன்கள் குளிர்காய்ந்தனர். ஆயினும் தன்னம்பிக்கையோடு அவர் ஹீரோவாக நடித்து, அதற்கான புரமோஷன் பணிகளிலும் முழுவீச்சில் ஈடுபட்டார். மேலும் படம் நிச்சயம் வெற்றிபெறும் என தான் நம்புவதாகவும் அவர் அனைத்து செய்தியாளர் சந்திப்புகளிலும் தெரிவித்துவந்தார். 

ஆனால், துர்வாய்ப்பாக அவர் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை என்பதே நிதர்சனம். படம் வெளியாகி படத்தின் ஹீரோவான லெஜண்ட் சரவணா விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை படம் எட்டவில்லை. அதுமட்டுமின்றி இசை, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப ரீதியாக படம் நன்றாகவே உருவாக்கப்பட்டிருந்தாலும், சரவணனின் செயற்கையான நடிப்பு மற்றும் நம்பகத்தன்மையற்ற காட்சிகளால் படம் சோபிக்கவில்லை. இதனாலேயே படம் எதிர்பார்த்த அளவுக்கு பேசப்படவில்லை.

‘தி லெஜண்ட்’ படம் திரையரங்குகளில் வெளியானதிலிருந்தே ஓடிடியில் எப்பொழுது வெளியாகும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  தயாரிப்பாளர் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தை ஓடிடியில் வெளியிடும் எண்ணத்தில் இல்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் தான், ‘தி லெஜண்ட்’-ன் ஓடிடி வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் கதாநாயகனுமான சரவணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் ‘நீங்கள் அனைவரும் காணும் வகையில் தி லெஜண்ட் விரைவில்’ என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் அப்படத்தை ஒடிடி-யில் விரைவில் வெளியிட முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது.

ஆயினும் எந்த ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளார், எந்த தேதியில் படம் வெளியாகவிருக்கிறது என்பது குறித்த தகவல்களை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. லெஜண்டின் தரிசனத்தை சற்று பொறுத்திருந்துதான் கண்டுகொள்ளவேண்டும் போல.

நீங்கள் அனைவரும் காணும் வகையில் ‘தி லெஜண்ட்’ விரைவில்…#TheLegend #LegendSaravanan pic.twitter.com/RbIzAbC3dw

— Legend Saravanan (@yoursthelegend) January 1, 2023