தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கைதி படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து ஜோதிகாவுடன் இவர் இணைந்து நடித்த தம்பி திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை ஒட்டி வெளியாகியிருந்தது. 

இதனை தொடர்ந்து கார்த்தி ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். சதிஷ், பொன்னம்பலம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் வில்லன் கருடா ராம் இதில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். 

சமீபத்தில் சுல்தான் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதுகுறித்து நடிகர் கார்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மூன்று வருடத்திற்கு முன் சுல்தான் கதையை கேட்க துவங்கிய நாளிலிருந்து கதை தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறது. சுல்தான் படத்திற்காக சிறந்த பணியை வழங்கிய முழு அணிக்கும் நன்றி என கூறியுள்ளார். 

இந்நிலையில் சுல்தான் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் நடிகர் கார்த்தி. முறையான பாதுகாப்புடன் இந்த டப்பிங் நடைபெற்று வருகிறது. அருகில் படத்தில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் உள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து ட்ரைலர் அல்லது டீஸரை எதிர்பார்க்கலாம் என்ற ஆவலில் உள்ளனர் கார்த்தி ரசிகர்கள். 

இந்த படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் இந்த படத்தில் உள்ளனர். இவர்களுடன் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்னரே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கவுள்ளதாக செய்திகள் வருவதை காண முடிகிறது. எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாக கூற முடியும்.