நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சனையால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் அன்றாடம் உழைத்தால் தான் சாப்பாடு என்று இருப்பவர்களின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.

சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், ஸ்டண்ட் யூனியன் ஆட்கள், குரூப் டான்சர்கள் மற்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் செலவுக்கு பணம் இல்லாமல் கிடைத்த பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரைத்துறை சார்ந்த பணிகள் முடங்கியுள்ளது. 

மளிகைக் கடை வைத்திருப்பது, காய்கறி விற்பது என்று வேறு பிழைப்பைத் தேடிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கன்னட படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீநாத் வசிஸ்தாவும் புது வேலையை செய்து வருகிறார். ஸ்ரீநாத் செலவுக்கு பணம் இல்லாமல் புது வேலைக்கு செல்லவில்லை. ஸ்ரீநாத் தன் குடும்பத்துடன் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து வேலை பார்க்கும் மற்ற பாதுகாவலர்கள் குவாரன்டீனில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் வீட்டுக்கு ஒருவர் பாதுகாவலர் பணியில் ஈடுபட வேண்டும் என்று அசோசியேஷனில் முடிவு செய்தனர். அதன் காரணமாக தான் ஸ்ரீநாத் வசிஸ்தா அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நின்று பாதுகாவலர் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் வாட்ச்மேன் பணியில் இருந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

முறையாக பாதுகாப்பு கவசம் அணிந்து, முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டு, கையில் தெர்மல் ஸ்கேனருடன் உள்ளார் ஸ்ரீநாத். 10 நாட்களுக்கு நாங்கள் தான் வீட்டுக்கு ஒருவராக பாதுகாவலராக இருக்க வேண்டும். நேற்று இரவு அவரது மகன் ருத்விக் வசிஸ்தாவும் பாதுகாவலர் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி மதியம் 2 மணி முதல் 10 மணி வரை பணி செய்கிறாராம். புதுவித அனுபவமாக உள்ள இந்த பணியை அவர் ரசித்து செய்வதாக கூறியுள்ளார். 

நடிப்பு தவிர்த்து எழுத்து, இயக்கம், ஸ்டாண்ட் அப் காமெடி, டப்பிங் போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரீநாத்தின் இந்த செயலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.