2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். சில நாட்களுக்கு முன் மண்ணுருண்ட மேல என்ற சூரரைப் போற்று பாடலில் சாதி தொடர்பான வரிகள் இருக்கிறது என கூறி புகார் அளிக்கப்பட்டது. இது அமைதியை குலைக்கும் வகையில் இருக்கிறது என கூறி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தில் மீதம் இருக்கும் மூன்று பாடல்கள் குறித்தும், சூரரைப் போற்று திரைப்படம் பற்றியும் 
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வீடியோ வாயிலாக பதிவு ஒன்றை செய்துள்ளார். ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், சூரரைப் போற்று படம் பற்றி பேசியுள்ளார். படம் செமயா இருக்கும். வித்தியாசமான படம். இயக்குனர் சுதா கொங்கரா இந்த படத்தின் மூலம் பல உயரங்கள் செல்வார் என பதிலளித்துள்ளார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது.