ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் நிதி அகர்வால். இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த மாதம் வெளியாகின. தற்போது உதயநிதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் சென்னையில் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி அவரின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள். பாலாபிஷேகம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நிதி அகர்வாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இது குறித்து நிதி அகர்வால் கூறியதாவது, இது காதலர் தின பரிசு என்று ரசிகர்கள் என்னிடம் தெரிவித்தனர். நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே சமயம் சந்தோஷமாக இருக்கிறது. என் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.

அந்த கோவில் இருக்கும் இடம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அது சென்னையில் இருப்பதாக கூறினார்கள். என் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் சேர்ந்து கட்டியிருக்கிறார்கள். நான் திரையுலகிற்கு புதிது. தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். தெலுங்கில் சில படங்கள் பண்ணியிருக்கிறேன். தற்போது இரண்டு மொழி படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறேன். அதனால் கோவில் கட்டியது அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.

எனக்கு முறையாக ரசிகர் மன்றம் கூட கிடையாது. சமூக வலைதளத்தில் தான் அவர்களுடன் டச்சில் இருக்கிறேன். கடந்த ஆண்டு ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் அதுவும் முடியவில்லை. குழந்தைகளுக்கும், நாய்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பேட்டிகளில் தெரிவித்தேன். அதனால் அவர்கள் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்வதுடன் விலங்குகளையும் கவனித்து வருகிறார்கள். ஆனால் கோவிலை எதிர்பார்க்கவில்லை.

அன்புக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ரசிகர்கள் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறேன். பவன் கல்யாணுடன் சேர்ந்து நடிக்கிறேன். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் மற்றும் மகிழ்திருமேனியின் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றார்.

தமிழகத்தில் நடிகைகளுக்கு கோவில் கட்டுவது புதிது அல்ல. முன்னதாக குஷ்பு, நமிதா, ஹன்சிகா ஆகியோருக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள். நயன்தாராவுக்கு கூட கோவில் கட்டியதாக தகவல் வெளியானது.