தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் பிரியர்களுக்கு சென்னை 28, காமெடி திரில்லர் விரும்பிகளுக்கு சரோஜா, பேச்சுளர்களின் கனவு லோகத்திற்கு கோவா, தல படமா மங்காத்தா, ருசி பார்க்க பிரியாணி, திகில் கலந்து மாஸ் காட்ட மாசு என்கிற மாசிலாமணி என பல ஜானரில் பட்டையை கிளப்பும் சினிமா சைன்டிஸ்ட். இன்னும் ரசிகர்களுக்கு பார்ட்டி மட்டும் தான் வைக்கவில்லை. அதற்கு பதிலாக மாநாடு நடத்தி வருகிறார். 

லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் வெங்கட் பிரபு, தனது நண்பர் யுகேந்திரனுடன் லைவ்வில் தோன்றி தனது திரைப்பயணம் குறித்தும், மலரும் நினைவுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். 

அப்போது பேசியவர் மாநாடு திரைப்படம் பற்றி பேசியுள்ளார். ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி ஷூட்டிங்கின் போது, காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடக்கும். நேரத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார். ஒரே டேக்கில் முடித்துவிடுவார். இரவு நேர படப்பிடிப்பின் போது ஏன் சார் நைட்ல ஷூட்டிங் வச்சு டார்ச்சர் பண்றீங்க என ஜாலியாக கேட்பார். எந்த பிரச்சனையும் இல்லை. வெளியே STR பற்றி வரும் வதந்திகளை பார்க்கும் போது, இவருக்கா இந்த நிலைமை என்று துணை இயக்குனர்கள் கேட்பார்கள். கோவிட் முடிந்து தான் இதன் மீதியுள்ள ஷூட்டிங் குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

வெங்கட் பிரபு மற்றும் STR இணைந்து பணியாற்றும் இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. எப்போதும் புது ட்ரெண்டை உருவாக்கும் STR, லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் நடித்து இணையதள ரசிகர்களுக்கு விருந்தளித்து குறிப்பிடத்தக்கது.