நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் நடிகர் அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். டெஸ்டில் நெகட்டிவ் வந்தவுடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று நடிகர் கருணாஸ் மருத்துவமனையிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

சில நாட்கள் முன்பு பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்திருந்தனர். இந்நிலையில் தற்போது ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். அதில் இரண்டு வாரங்களாக தனிமை படுத்திக் கொண்டு குவாரண்டைனில் இருந்தோம். எந்த அறிகுறியும் இல்லை. 

தற்போது டெஸ்ட் எடுக்கலாம் என சென்று சோதனை செய்து கொண்டோம். எங்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்திருக்கிறது. இன்னும் மூன்று வாரங்கள் காத்திருந்த பிறகு தான் antibodies உருவாகி இருக்கிறதா என பார்த்துவிட்டு பிளாஸ்மா தானம் செய்யலாமா என பார்க்கலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார் என்றும் ராஜமௌலி தனது பதிவில் கூறியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடப்பதாக உருவாகும் இந்தப் படத்தில் ராம் சரண் தியாகி அல்லுரி சித்தாராம ராஜுவாகவும், என்டிஆர் தியாகி கொமரம் பீமாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ், மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். பெரும் பொருட் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது.