உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட பல படங்களின் மூலம் திரை விரும்பிகளை ஈர்த்தவர் இயக்குனர் மகேந்திரன். சினிமா இலக்கணத்தை வகுத்து, சிறந்த இயக்குனராய் திகழ்ந்த இவர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அட்லீ இயக்கத்தில் தெறி படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார். அவரது படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மகேந்திரன். 

மகேந்திரனின் திரைப் பாதையை பின்பற்றி அவரது மகனான ஜான் மகேந்திரன் இயக்குனரானார். இரண்டு தெலுங்கு படங்களை இயக்கியிருந்தாலும், இவர் இயக்கத்தில் வெளியான சச்சின் திரைப்படம் சினிமா பிரியர்களின் ஃபேவரைட். தளபதி விஜய்யின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படம். ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார் என்று கூறுவதை விட சச்சின் எனும் பாத்திரத்தை அவ்வளவு அழகாக வடிவமைத்திருப்பார். 

தெறிக்க தெறிக்க மாஸ் வசனங்கள் என்று ஏதும் இல்லாமல், கூலான கிளாஸான செகண்ட் ஹான்ட் புல்லட் அல்லது சைக்கிளில் வலம் வந்திருப்பார் விஜய். மலையரசியின் மனம் மயக்கும் லொகேஷன் மறுபுறம் என விழிகளுக்கு விருந்தளித்திருப்பார் ஜான். அதன் பிறகு ஆணிவேர் என்ற படத்தை இயக்கினார். 

சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜான் மகேந்திரனின் ட்வீட்டுகளுக்கு ரசிகர்கள் ஏராளம். அதனால் அவரை பின்தொடருபவர்கள் தாராளம். 

இந்நிலையில் சுவையூட்டும் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜான். அவரது மகன் கெவின் ஆடம்ஸ் விசித்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார். Publicity designer என்று சொல்லப்படும் திரைப்பட விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். விசித்திரன் படத்தின் விளம்பர போஸ்டர்கள் அனைத்தும் இவர் கைவண்ணத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்பா மற்றும் தாத்தா இருவரும் புகழ்பெற்ற இயக்குனர்கள், அதனால் வாய்ப்பு எளிது என்ற விஷயம் இருந்தாலும், வடிவமைக்கும் வலி மற்றும் ஆற்றல் கெவினையே சேரும். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று டாக் ஆஃப் தி டவுனில் இருக்கும் டிசைனர் கெவின் அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. இனி போட்டோஷாப் போர்கள் நடக்கட்டும், இன்டிசைன் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் இன்பம் தரட்டும். போஸ்டர்கள் ரசிகர்களின் மனதை ஆளட்டும். 

விசித்திரன் படத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார். ஜோசப் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.