கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், கார்த்தி நடித்த பையா, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்துள்ளார் தயாநிதி அழகிரி. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளிட்டவைக்கு போட்டியாக கிளவுட் நயன் மூவிஸ் தொடங்கிய இவர் தயாரிப்பில் வெளியான முதல் படம் அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் தமிழ்ப்படம் தான்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படத்தை தயாரித்தார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, பிரேம்ஜி, வைபவ், மகத் என மல்டி ஸ்டாரர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். தல அஜித் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு தரமான படத்தை தயாரித்த பெருமை தயாநிதி அழகிரியை சேரும். தூங்கா நகரம், உதயம் என்.எச்4, தகராறு, வடகறி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது மாஸ்க் எனும் குறும்படத்தை இயக்கி உள்ளார் தயாநிதி அழகிரி. அதன் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி அசத்தி வருகிறது. தயாரிப்பாளராக கலக்கி வந்த தயாநிதி அழகிரி இப்போ இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். சீக்கிரமே பெரிய பட்ஜெட் திரைப்படத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட் வட்டாரத்திற்கு ஒரு புதிய இயக்குனர் கிடைத்து விட்டார், பல நல்ல கதைகள் இனி நமக்குண்டு என்ற ஆவலில் மகிழ்ச்சியாக உள்ளார் நடிகர்கள். 

நடிகரும் தயாநிதி அழகிரியின் சகோதரருமான அருள்நிதி இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார். மாஸ்க்குக்குள் ஒளிந்திருக்கும் அந்த முகம் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீக்கிரமே பெரிய படம் எடுக்கவும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

நடிகர் சூரியும் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, மாஸ்க்குக்கு உள்ள மாஸான விசயம் மறைஞ்சு இருக்குன்னு மட்டும் தெரியுது. இயக்குனர் அவதாரம் எடுத்துருக்கும் பாசத்துக்குரிய தயாநிதி அழகிரி ப்ரதருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவு செய்துள்ளார். லாக்டவுனில் நடிகர்கள் பலர் இயக்கம், பாடல் என பன்முகம் கொண்டு விளங்கியதை காண முடிந்தது. அதே பாணியில் தற்போது டைரக்ஷன் டிபார்ட்மென்டில் காலடியெடுத்து வைத்திருக்கும் தயாநிதி அழகிரியை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. 

இது ஒருபுறம் இருக்க, விரைவில் தனது சகோதரர்கள் வைத்து பெரிய படத்தை இயக்கி விடுவார் தயாநிதி என்று அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.