கடந்த 2013-ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் மீண்டும் துவங்கவுள்ளது என அறிவித்துள்ளனர் படக்குழு. இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த மார்ச் மாதமே துவங்கி நடைபெற்று வந்தது. வாரணாசியில் சில முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால்
ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு துவங்கவுள்ளது. 

தமிழகத்தில் மதுரையில் இந்த ஷுட்டிங் துவங்கவுள்ளது என்ற சுவையூட்டும் தகவலும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து இடைவெளியில்லாமல் மூன்று மாதங்களுக்கு படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். மேலும் மற்ற சில படங்கள் ஷூட்டிங் துவங்குவதாக கூறப்பட்டாலும் அவை ஸ்டுடியோவில் தான் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆனந்த் எல் ராய், இந்த லாக்டவுன் நேரத்தில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டு இனி நடக்க உள்ள ஷூட்டிங்கிற்காக தயாராகி வந்தேன். இந்த படப்பிடிப்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தான் நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார். இப்படியிருக்க தனுஷ் மற்றும் சாரா அலிகான் இருவரும் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாரணாசியில் முதல் கட்ட ஷூட்டிங் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது. 

நமக்கு கிடைத்த தகவலின் படி, அத்ரங்கி ரே படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம். தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு, தொடர்ந்து தனுஷ் படங்களின் அப்டேட்டுகள் வருவதால் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது. லாக்டவுன் காரணமாக பல துறை சார்ந்த பணிகள் முடங்கப்பட்டது. குறிப்பாக சினிமா துறை முற்றிலும் முடங்கியது. தியேட்டர்கள் திறக்காததால் மக்கள் ஓடிடி-ல் படங்களை பார்த்து வருகின்றனர். ஓடிடி எனும் தளம் இருந்தாலும், திரையரங்குகளில் படங்கள் வெளியானால் தான் திருவிழா போல் இருக்கும் என்று குமுறி வருகின்றனர் திரை விரும்பிகள். இந்நிலையில் பாலிவுட் சினிமா தற்போது மீண்டும் பணிக்கு திரும்ப தயாராகி வருகிறது. விரைவில் கோலிவுட்டும் படப்பிடிப்புக்கு தயாராகிவிடும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.