போலீசை சுற்றி வளைத்துத் தாக்கிய 4 பேர்!
By Arul Valan Arasu | Galatta | August 30, 2019 17:42 PM IST
சென்னையில் போலீசை 4 பேர் சுற்றி வளைத்துத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் சிறப்புக் காவல் ஆய்வாளர் கார்த்திக், நீதிபதி ஒருவருக்குச் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை சிறப்புக் காவல் ஆய்வாளர் கார்த்திக், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள், காவல் ஆய்வாளர் கார்த்திக்கைச் சுற்றி வளைத்துத் தாக்கி உள்ளனர்.
இதனால், காவல் ஆய்வாளர் கார்த்திக்கும் பதிலுக்குத் தாக்கத் தொடங்கி உள்ளார். இதனையடுத்து, 4 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.
பின்னர், தன்னை தாக்கியது தொடர்பாக ஆய்வாளர் கார்த்திக் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதன்படி, விசாரணை நடத்திய சிறிது நேரத்தில் காவல் ஆய்வாளரைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரைத் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய 4 பேரும், போதையிலிருந்ததாக தெரியவந்துள்ளது. இதனிடையே, பட்டப்பகலில் போலீசார் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ---