சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை?
By Arul Valan Arasu | Galatta | September 04, 2019 10:54 AM IST
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதை அடுத்துப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, விமான நிலையத்திற்குள் நுழையும் எல்லா வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளின் பொருட்களையும், அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்த பிறகே விமானத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
இதனிடையே, சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது இதுபோன்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். குறிப்பாக, வழக்கத்தைவிடச் சென்னை விமான நிலையத்தில் இன்று பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.