பிக்பாஸ் கவின் அம்மாவுக்கு சிறைத் தண்டனை - மோசடி விவரங்கள் உள்ளே..
By Arul Valan Arasu | Galatta | August 30, 2019 11:42 AM IST
பணம் மோசடி வழக்கில் “பிக்பாஸ்” கவின் அம்மா ராஜலெட்சுமிக்கு சிறைத் தண்டனை.
திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த “பிக்பாஸ்” நாயகன் கவின், சினிமா வாய்ப்புக்கா கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், கவின் சிறுவயதாக இருக்கும்போது, கடந்த 2007 ஆம் ஆண்டு, கவின் அம்மா ராஜலெட்சுமி என்கிற ராஜி, சொர்நாதன், அருணகிரிநாதன், தமயந்தி, ராணி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து ஏலச் சீட்டு நடத்தி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, கடந்த 2007 ஆம் ஆண்டு 29 பேர், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாகத் திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி கிருபாகரன் மதுரம் தலைமையில் 35 பேரை விசாரணை செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருணகிரி, சொர்ணநாதன் ஆகிய இருவரும் வழக்கு விசாரணையின்போதே இறந்து விட்டார்கள். இதனால், மீதம் இருக்கும் தமயந்தி, ராஜலெட்சுமி (பிக்பாஸ் கவின் தாயார்), ராணி ஆகிய 3 பேருக்கும் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையைக் கட்ட தவறினால், மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் தீர்ப்பு வழங்கினார்.
மேலும், குற்றவாளிகள் பெயரில் உள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
குறிப்பாக, வழக்குப் பதிவு செய்த நாளிலிருந்து 7 . 5 சதவீத வட்டியுடன் சேர்த்து, மொத்தம் 55 லட்சத்து 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், இந்த பணத்தைக் கட்ட தவறினால் 3 பேரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.