தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தை நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா அவர்களின் தயாரிப்பில் அக்னி சிறகுகள் என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் காக்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன. 

தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து, ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு தனது படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கூறியது பலரது பாராட்டை பெற்றது. லாக்டவுனில் சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் விஜய் ஆண்டனி என்ற பெருமையையும் பெற்றார். 

விஜய் ஆன்டனியின் படங்களுக்கு, தமிழ்ப் பட வியாபார எல்லைகளைத் தாண்டியும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. 2016-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படம்,  ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆன்டனி. 

விஜய் ஆன்டனியின் ஒவ்வொரு படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் நிலையில், அவரது பிறந்த நாளான ஜூலை 24-ம் தேதி, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. விஜய் ஆன்டனி பிக்சர்ஸ் பி லிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தை தேசிய விருது வென்ற பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். இவர் பாரம் எனும் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் ஆவார். நாளை காலை 11 மணியளவில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. இதுகுறித்து விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி பதிவு செய்துள்ளார். 

படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நாளை வெளியிடப்படும். இந்த அப்டேட்டை கண்ட ரசிகர்கள் பலர், பிச்சைக்காரன் இரண்டாம் பாகமா இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி.