தமிழ் திரையுலகில் மக்கள் விரும்பும் நடிகர்களில் ஒருவர் ஆர்யா. 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இன்று பல வெற்றி படங்களை தந்து ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு காப்பான் மற்றும் மகாமுனி படத்தில் நடித்திருந்தார் ஆர்யா. தற்போது இவர் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. 

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். 

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது. மகிழ் திருமேனி படத்தின் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை விலங்குகள் திரைப்படங்களில் பேசுவதாக சித்தரிக்கப்பட்டு படங்கள் வெளியான நிலையில் தற்போது டெடி பொம்மை பேசுவதாக வெளியாகி இருந்த டெடி படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. இதனைத்தொடர்ந்து இந்த லாக்டவுனில் டெடி ஜுக் பாக்ஸ் வெளியானது. 

இந்தப்படம் ஜூன் மாதம் திரையில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கொரானா வைரஸ் தாக்கத்தினால் இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது என வதந்திகள் கிளம்பியது. இதுகுறித்து பிரபல 
நாளிதழுக்கு பேசிய இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், இந்த படம் தியேட்டரில் தான் வெளியாகும். படத்தின் திரையரங்க விற்பனை ஏற்கனவே நடந்து முடிந்தது. சூழ்நிலை சரியாக அமைந்தால், இந்த வருடமே படத்தை வெளியிட அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஆர்யா தனது நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது. சைக்கிள் பிரியரான ஆர்யா சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். இவருடன் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மற்றும் நடிகர் கலையரசன் உள்ளனர். ஃபிட்னெஸில் அதிக அக்கறை கொண்ட ஆர்யா தனது அடுத்த படமான சல்பேட்டா பரம்பரை படத்திற்கு தயாராகி வருகிறார் என்று கமெண்ட் செய்துள்ளனர் இணையவாசிகள். 

ஆர்யா ஹீரோவாக நடிக்கும் சல்பேட்டா பரம்பரை படத்தை பா ரஞ்சித் இயக்கிவருகிறார். ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக உடல் எடையை மாற்றி அசத்தலாக தயாராகி வருகிறார் ஆர்யா. லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது. வட சென்னை பின்னணியில் குத்துச் சண்டையை மையமாக வைத்து, த்ரில்லர் களத்தில் உருவாக்கவுள்ளாராம். இதில் ஆர்யாவுடன் இணைந்து சத்யராஜ், தினேஷ், மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.