எதார்த்தமான நடிப்பால் தமிழ் திரையுலகில் தனக்கான ஓர் இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் அருள்நிதி. 2010-ம் ஆண்டு வம்சம் படத்தின் மூலம் அறிமுகமானவர், உதயன், மௌன குரு, ஒரு கன்னியும் மூன்று களவாணியும், டீ மான்டி காலனி, ஆறாது சினம் என பல குறிப்பிடத்தக்க நல்ல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல நடிகர் என்ற பெயரையும் ஆதரவையும் பெற்றார். 

கடைசியாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 திரைப்படத்தில் காணப்பட்ட அருள்நிதி, சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். என். ராஜசேகர் இயக்கத்தில் களத்தில் சந்திப்போம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. 

இந்நிலையில், அருள்நிதியின் 14-வது திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தை இன்னிசை பாண்டியன் இயக்குகிறார். சியான் விக்ரமின் கோப்ரா படத்திற்கு வசனகர்த்தாவான அவர், இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் குற்றம்23 புகழ் இயக்குனர் அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

அருள்நிதி14 திரைப்படத்தை Five Star Creations பேனரின் கீழ் கதிரேசன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்துக்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். இவர் மாயா, கேம் ஓவர், இறவாக்காலம் போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றவர். இந்த படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இதை வெளியிடுகிறார். மதியம் 12 மணிக்கு இந்த டைட்டிலை வெற்றிமாறன் வெளியிடுகிறார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். 

வழக்கமாக அருள்நிதி தேர்வு செய்யும் கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்பதால், இந்த படத்தின் கதையும் மாறுபட்ட விதத்தில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.