அடேங்கப்பா... இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.1 கோடியே 83 லட்சம்!
By Arul Valan Arasu | Galatta | August 27, 2019 15:31 PM IST
ஆந்திராவில் இறந்த பிச்சைக்காரரிடம் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திர வரத்தில் உமா மார்க்கண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வாசலில் அமர்ந்து, கடந்த 15 வருடங்களுக்கு மேலாக காஞ்சி நாகேஸ்வரர் ராவ் என்பவர், தங்கி பிச்சை எடுத்து வந்துள்ளார்.
நாள்தோறும் கோயிலுக்கு வருபவர்கள் தரும் பணத்தைக் கொண்டும், , பிரசாதங்களை உண்டும் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்ட அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, அவர் ஆதரவற்றவர் என்பதால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நேரில் வந்த போலீசார் இறந்துபோன பிச்சைக்காரருக்குச் சொந்தமான உடைமைகளைச் சோதனை செய்தனர்.
அப்போது, சுருட்டி மடிக்கப்பட்ட நிலையில், பண்டால் பாண்டலாக நிறையப் பணம் இருப்பது தெரியவந்தது. மொத்த பணத்தையும் வெளியே எடுத்த போலீசார், அவற்றை மொத்தமாக எண்ணியுள்ளனர். ஆனால், எண்ணி முடிப்பதற்குள் போலீசாருக்கு தலைச் சுற்றலே வந்துவிட்டது. ஆம், இறந்துபோன பிச்சைக்காரரிடம் மருத்துவச் செலவுகள் எல்லாம் போக, மொத்தமாக 1 கோடியே 83 லட்சம் ரூபாய் இருந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, அவற்றிலிருந்து வெறும் 3 ஆயிரம் ரூபாயை மட்டும் எடுத்து, அவரின் இறுதிச் சடங்கிற்கு போலீசார் பயன்படுத்தி உள்ளனர். மீதிப்பணத்தை, அவர் பிச்சை எடுத்த கோயில் சார்பாக ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் மற்றும் நலவாழ்வுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.