தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. 

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், WYNK மியூசிக் கான்செர்ட்டில் நேற்று மாலை பங்குபெற்றார். அப்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குவிட் பண்ணுடா பாடலை பாடியுள்ளார். மேலும் மாஸ்டர் திரைப்படம் எப்படி வந்துள்ளது என்பது பற்றியும் பேசியுள்ளார். மாஸ்டர் ரீரெகார்டிங் பணியில் இருக்கும் அனிருத், ஒட்டுமொத்த படத்தையும் பார்த்துள்ளார். செமயா வந்திருக்கு படம் என்று கூறியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தளபதி விஜய். தியேட்டரில் படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக அனிருத் தெரிவித்துள்ளார். 

அனிருத் இசையில் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் ஈர்த்து வருகிறது. இந்திய திரையுலகின் ரசிகர்களின் நாடியறிந்து இசையமைக்கும் திறன் கொண்டவர் அனிருத். இந்த லாக்டவுனில் தன் ஸ்டூடியோவிலே அதிக நேரத்தை செலவு செய்து வருகிறார் நம் ராக்ஸ்டார். தொடர்ந்து அவர் பணிபுரியும் படங்களுக்கு நல்ல ட்யூன்களை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தார். 

கொரோனா லாக்டவுன் பிரச்சனையை பொறுத்தே படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும், அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காகதான் படக்குழு காத்திருக்கிறது என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார். லாக்டவுனில் பல திரைப்படங்கள் ஓடிடி-ல் வெளியாவதை பார்க்க முடிகிறது. இந்த தருணத்தில் சேவியர் பிரிட்டோ கூறிய இச்செய்தி இனிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.