சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கலகலப்பு. இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கருணாகரன். முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். படங்களுக்கு வருவதற்கு முன்னரே குறும்படங்களில் நடித்து வந்தார் கருணாகரன். இவர் நடித்த பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, லிங்கா போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் கருணாகரன். இந்த ஷூட்டிங்கின் போது நடிகர் கருணாகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை அவர் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அதன் பாதிப்பு அதிகரித்ததால், மருத்துவர்களிடம் ஆலோசித்துள்ளார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

இதையடுத்து அவரை இரண்டு வார காலத்துக்கு ஓய்வெடுக்கச் சொல்லியுள்ளனர் மருத்துவர்கள். விரைவில் அவர் பூரண நலம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணாகரன் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். 

இயல்பு நிலை திரும்பியவுடன், கருணாகரன் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். 

எஸ்.ஏ.சந்திரசேகரன், பாரதிராஜா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், டேனியல் உள்பட பலர் நடிக்கின்றனர். அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார், சிம்பு. இதன் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தீம் பார்க் ஒன்றில், செட் அமைத்து நடந்தது. அங்கு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. 

இந்த படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான், யோகி பாபுவுடன் பன்னி குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கருணாகரன் நடிப்பில் ட்ரிப் திரைப்படம் உருவாகியுள்ளது. த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமான ட்ரிப் படத்தில் யோகிபாபு மற்றும் சுனைனாவுடன் சேர்ந்து நடிக்கிறார் கருணாகரன்.