நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியில் சிறப்பாக விளையாடிய வார்னர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பத்து அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற  41-வது லீக் ஆட்டத்தில் நேற்று டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின.

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டியில் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை பின்பற்றி டெல்லி அணியும் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணிக்கு பின்ச்சும், வெங்கடேஷும் தொடக்கம் தந்தனர். அதனைத்தொடர்ந்து  கொல்கத்தா அணி  முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அவர்களை தொடர்ந்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் 6 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பவல்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும் தொடர்ந்து அதே ஓவரில் குல்தீப் வீசிய அடுத்த பந்தில் நரேன் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி வீரர் ரசல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் குல்தீப் சுழலில் டக் அவுட்டாகி வெளியேறினார். 15-வது ஓவருக்கு பிறகு அதிரடி காட்டிய நிதிஷ் ராணா அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ரிங்கு சிங் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும் , ரகுமான் 3 விக்கெட்களும் கைப்பற்றி அசத்தினர். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பிரித்வி ஷா முதல் பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

இந்நிலையில் அவரை தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 13 ரன்களில் பிரதீப் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த வார்னர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் 24 எடுத்து ரன் அவுட்டாக கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.  அணியின் நம்பிக்கையாக இருந்த பவல்  - தாக்குர் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் டெல்லி அணி 19-வது ஓவரில் 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இதன் தொடர்ச்சியாக புனேவில் இன்று நடைபெறவுள்ள  42-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. லக்னோ அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.