“இந்திய அணியை விட மும்பை இந்தியன்ஸ் சிறந்த டி20 அணி” என்று,  மைக்கேல் வாகன் விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 

அதன் படி, டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் வீழ்ந்த இங்கிலாந்து அணி, தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

குறிப்பிட்ட இந்த 5 போட்டிகளும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 

அதன் படி, இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 
முதலில் பந்து வீச முடிவு செய்ததால், அதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆனால், அவர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல், 4 ரன், 1 ரன் என்று, அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனையடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலியும், ரன் எதுவும் எடுக்காமல் டக்கவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் தொடர்ச்சியாக களம் இறங்கிய ரிஷாப் பண்ட் 21 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்களும் விலாசி போட்டியின் போக்கையே மாற்றினார்கள்.

அத்துடன், எப்போதும் அதிரடியாக விளைாயடும் பாண்ட்யா இந்த முறை 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் தொடர்ச்சியாக களம் கண்ட இந்திய அணி வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே ரன்களை எடுத்து, அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதானல், இந்திய அணி வீரர்கள் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறினார்கள்.

இதனால், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் 49 ரன்களும், பட்லர் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு, களமிறங்கிய மலான் 24 ரன்களும், பெயர்ஸ்டோ 26 ரன்களும் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டி பிடித்தனர். 

அதன் படி, இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மிக எளிதான பெற்று, வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், “ஐ.பி.எல்.லில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியினர், 20 ஓவர் டி-20 போட்டியில், இந்திய டீமை விட, மிகச் சிறந்த அணியாக இருக்கின்றனர்” என்று, விமர்சனம் செய்து உள்ளார்.

அத்துடன், “நான், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியைக் குறிப்பிடுகிறேன்” என்றும், அவர் தெரிவித்துள்ளார். இது, இணையத்தில் வைராகி வரும் நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி பேசும் போது, “இத்தகைய தன்மை கொண்ட ஆடுகளத்தில் எந்த மாதிரி விளையாட வேண்டும் என்பது, போதுமான அளவுக்கு எங்களுக்குத் தெரியாமல் போய் விட்டது” என்று, தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.