வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்களுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்து உள்ளது.

இந்த போட்டியில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் கைவிட்ட போதிலும், கிங் கோலியின் க்ளாசிக் ஆட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருந்து. என்றாலும், இந்த போட்டியில் இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி, 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை வாரி வழங்கினார்.

இந்திய பந்து வீச்சாளர்களில் ஷமி மட்டுமே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால், இந்திய அணியின் தோல்விக்கு ஷமியின் பந்து வீச்சும் முக்கிய காரணம் என்று, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலரும் மிக மோசமான அளவில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு அவரை மிக மோசமான அளவில் விமர்சித்து வந்தனர். 

அத்துடன், முகமது ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குடும்பத்தினர் பற்றியும் பலவிதமான மோசமான கருத்துக்களை பலரும்  பதிவிட்டனர். இதனால், மிக மோசமாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முகமது ஷமிக்கு ஆதரவாகவும் இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர். 

அதன் படி, இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “முகமது ஷமி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்களுக்கு யாரும் அன்பை தராததால், அவர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். அவர்களை மன்னித்து விடுங்கள்” என்று, செமயாக தனது கருத்தை பதிவிட்டு இருந்தார்.

அத்துடன், இது பற்றி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ள டிவிட்டர் பதிவில், “பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் விளையாடிய 11 பேரில் முகமது ஷமியும் ஒருவர். முகமது ஷமி மட்டும் தனியாக விளையாடவில்லை. உங்கள் சக வீரர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மோசமாக அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் ட்ரோல் செய்யப்படும் போது, அவருக்கு ஆதவாரக நிற்காமல், கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இந்திய அணியினர் அனைவரும் மைதானத்தில் முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்தது எந்த விதத்திலும் பொருட்படுத்த முடியாது” என்று, காட்டமாகவே கூறியுள்ளார்.

அதே போல், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள டிவிட்டர் பதிவில், “இந்திய அணியை நாம் ஆதரிக்கிறோம் என்றால், இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். முகமது ஷமி உலகத்தரமான பந்துவீச்சாளர். மற்ற வீரர்களை போலவே, அன்று ஷமிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. நான் முகமது ஷமிக்கு பின்னாலும், இந்திய அணிக்கு பின்னாலும் நிற்கிறேன்” என்று, கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வெளியிட்டுள்ள கருத்தில், “முகமது ஷமி மீது நடத்தப்படும் சமூகவலைதள தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அவரோடு துணை நிற்கிறோம். அவர் ஒரு சாம்பியன். யார் ஒருவர் இந்திய அணியின் தொப்பியை தங்கள் தலை மீது சூட்டுகிறார்களோ, அவர்கள் இந்திய நாட்டை தங்கள் இதயத்தில் ஏந்தி நிற்கிறார்கள் என்று பொருள். எந்த ஒரு சமூக வலைதள கும்பலை விடவும், அவர்களுக்கு தேசப்பற்று அதிகம். உங்களோடு இருக்கிறோம் ஷமி” என்று, சேவாக் பதிவிட்டு உள்ளார். 

இது குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தனது டிவிட்டர் பதிவில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது நானும் அணியில் இருந்து உள்ளேன். அப்போதும், இந்தியா தோற்று இருக்கிறது. ஆனால், என்னை நீங்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று யாரும் சொன்னது கிடையாது. ஆனால், நான் பேசுவது சில வருடங்களுக்கு முந்தைய இந்தியாவை. இது போன்ற முட்டாள் தனம் நிறுத்தப்பட வேண்டும்” என்று, காட்டமாகவே கூறியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் கூறியுள்ள கருத்தில், “முகமது ஷமி நாங்கள் உங்களை காதலிக்கிறோம்” என்று பதிவிட்டு உள்ளார். 

அதே போல், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் தனது டிவிட்டரில், “முகமது ஷமி இந்திய கிரிக்கெட் வீரர். நாங்கள் அவருக்காக பெருமைப்படுகிறோம். பாகிஸ்தானுடன் அடைந்த தோல்விக்காக அவரை குறி வைப்பது மோசமான செயல்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், “நீங்கள் ஒரு போட்டியில் பங்கேற்று விளையாடச் செல்லும் போது, ​​நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செல்வீர்கள். எதிரணி வீரரிடம் கை குலுக்குவதோ அல்லது ஒருவரை கட்டிப்பிடிப்பதோ தவறில்லை. ஆனால், நீங்கள் களத்தில் ஒரு போட்டியில் விளையாடும் போது, நட்பு எல்லாம் பார்ப்பதில்லை. வெல்ல வேண்டும் என்று தான் விளையாடுகிறோம். நமது அணி வெற்றி பெற்றாலும் சரி, தோற்றால் சரி, அது நமது நாட்டுக்காக விளையாடும் அணி. அதில் தனி நபரை குறிவைப்பது சரியல்ல” என்று, கூறியுள்ளார்.

மேலும், “இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியவர்கள். இந்தியாவிற்காக இவ்வளவு காலமாக விளையாடி, போட்டிகளில் வெற்றி பெற்றவரை, எந்தவொரு சமூகத்துடனும் ஒப்பிட்டு பேசுவது வெட்கக்கேடானது. நாம் அனைவரும் முகமது ஷமி மற்றும் இந்திய அணியுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

அதே போல், கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.