சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் ஐபிஎல் போட்களில் புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 15 வது சீசன், வரும் 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக சேர்ந்து உள்ளன. இதனால், மொத்தம் 10 அணிகளுக்கு ஏலம் நடந்து முடிந்த நிலையில், இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் 10 நாட்களுக்குளே உள்ளன.

இந்த ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் “சின்ன தல” என்று, செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது, சென்னை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான், குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இதனையடுத்து, அவருக்கு பதிலாக “சுரேஷ் ரெய்னா சேர்க்கப்படுவார்” என்று, எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. 

இதனால், சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் தான், ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா “கிரிக்கெட் வர்ணனையாளராக” புதிய அவதாரம் எடுக்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சுரேஷ் ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த, ஸ்டார் நிறுவனம் இந்த புதிய யோசனையை கையில் எடுத்து உள்ளது.

இதன் காரணமாகவே, சுரேஷ் ரெய்னாவை போட்டியின் போது வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை அவருக்கு வழங்க முன் வந்திருக்கிறது. 

இதற்கு, சுரேஷ் ரெய்னா தரப்பில், “ரசிகர்களுக்காக இந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டு உள்ளதாகவும்” கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சுரேஷ் ரெய்னா, இந்த ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாகவும் கிட்டதட்ட உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே போல், முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனைக்கு மீண்டும் திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.