“தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவியாக மதத்தை பயன்படுத்துகிறார்கள்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது.. திமுக அரசு தான்” என்றும், பெருமையோடு கூறினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் திமுவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து ஆண்டு வந்த நிலையில், இதில் திமுக ஆட்சி காலத்தில் தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த பல்வேறு விசயங்களை முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இந்த சூழலில் தான், வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முன்னதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உலகம் முழுவதும் வாழும் இனம் தமிழினம்” என்று, பெருமையோடு குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய முதல்வர், “உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம் என்றும், உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு” என்றும், பெருமிதத்தோடு நினைவு கூர்ந்தார். 

அத்துடன், “தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது திமுக அரசு என்றும், இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்” என்றும், முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார். 

“தமிழுக்கு பழம் பெருமை இருப்பதால் அது குறித்து நாம் தொடர்ந்து பேசுகிறோம்” என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மற்றவர்களுக்கு பேச எந்த பெருமையும் இல்லை” என்றும், வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்.

மேலும், “வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தை திமுக அரசு உருவாக்கி உள்ளது என்றும், வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் குறு தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது” என்றும், முதல்வர் சுட்டிக்காட்டினார்.

“புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு உதவி செய்ய வேண்டும்” என்று, கேட்டுக்கொண்ட முதல்வர், “கடந்த 1938 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் காப்பு போராட்டங்கள் திமுகவால் நடத்தப்பட்டன” என்றும், அவர் நினைவு கூர்ந்தார். 

குறிப்பாக, “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.

அதே போல், “இரு மொழிக் கொள்கையை நிறைவேற்றியது திமுக அரசு தான் என்றும், தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது திமுக அரசு தான்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். 

முக்கியமாக, “தமிழுக்கு பழம்பெருமை இருப்பதால், நாம் அதுகுறித்து பேசுகிறோம் என்றும் ஆனால் அவர்களுக்கு பேச எந்த பெருமையும் இல்லை என்பால், தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவியாக மதத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்” என்று, முதல்வர் காட்டமாகவே பதில் அளித்தார்.

மிக முக்கியமாக, “தமிழினத்தை மேம்படுத்தும் எண்ணத்தோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாடாக திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினார்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தற்போது முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதன்படி, தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த தொழில் முதலீட்டார்ளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. 

முக்கியமாக, “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்றும், பெருமையோடு நினைவு கூர்ந்தார்.

இந்த 60 ஒப்பந்தங்கள் மூலம் கிட்டதட்ட 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.