“தமிழக மக்கள் பிரச்னையில் தேவையே இல்லாமல் அரசியலை புகுத்தி, கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால், அது நடக்காவே நடக்காது” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தமிழ்நாட்டில் எந்த நிகழ்வுகள் நடந்தாலும், அதனை இங்குள்ள எதிர்கட்சிகள் அரசியலாக்க முயல்வதாக ஆளும் கட்சி தரப்பிரலிருந்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வந்தன. இதனால், தமிழகத்தில் சமூக சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

இதற்கு உதரணமாக, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை, சாதி - மத ரீதியான அரசியலாக பாஜக அப்போது கையில் எடுத்து, பெரிய அசியல் செய்து வந்தது. இது குறித்த உண்மை தன்மையை சிபிசிஐடி போலீசார் வெளிக்கொண்டு வந்தனர். இதனையடுத்து, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், பாஜக அப்படியே பின்வாக்கிக்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழக சட்டமன்றம் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதில் பல்வேறு துறைகளின் கீழ் தமிழக அமைச்சர்கள், பல்வேறு அறிவிப்புகளை அன்றாடம் வெளியிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் “மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்து” தமிழக சட்டமன்றப் பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்தார்.

 அதற்கு, பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திலே இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“இன்று, அதிலே தீர்ப்பை எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம். இருந்தாலும், நம்முடைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார்கள். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை” என்று, கூறினார்.

“இருந்தாலும், பாஜக கட்சியைச் சார்ந்த உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வைக்கிறேன்” என்று பேசிய முதல்வர், “அது என்னவென்று கேட்டால், ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள்” என்று, கேட்டுக்கொண்டார்.

“இது தான் என்னுடைய வேண்டுகோள் என்றும், சாமானிய மக்கள் பாதிக்கிற வகையில், இன்றைக்கு பெட்ரோல் விலை, டீசல் விலை, அதே போன்று, கேஸ் சிலிண்டர் விலை, இவையெல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது என்றும், அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நீங்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

“அது மட்டுமல்லாமல், நம்முடைய தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடமும், குறிப்பாக இந்தியப் பிரதமரிடத்திலும் நான் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன் என்றும், இதனால் அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்து, அதைப் பெறுவதற்கான முயற்சியிலே நீங்கள் ஈடுபட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

“நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் நடக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் இதிலே அரசியலைப் புகுத்தி, அதன் மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்களே ஆனால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.