“உங்களால் முடிந்தால் ஆதீனத்தை தொட்டுப் பாருங்கள்.. பார்ப்போம் என்று,” தமிழக அரசுக்கு பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக சவால் விடுத்துள்ள சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. 

தமிழ்நாட்டில் அதிமுக தான் எதிர் கட்சி என்றாலும், பல விசயங்களிலும், பாஜக தான், தமிழ்நாட்டின் எதிர் கட்சியைப் போல் செயல்பட்டு வருவதாக தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எப்போது எது பேசினாலும், செய்தியாளர்களை சந்தித்ததாலும், அது சர்ச்சையாவதுடன், வைரலாகவும் மாறி விடுவது உண்டு.

அந்த வகையில் தான், தற்போது  பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு பகிரங்க சவால் விடுக்கும் வகையில் பேசி உள்ளது பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது, மதுரை பழங்காநத்ததில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். 

அப்போது, இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக ஆட்சியில் இருட்டு நிலவி வருகிறது” என்று, கடுமையாக விமர்சனம் செய்தார். 

அத்துடன், “சினிமா மாடல் போல நடிப்பதே, திராவிட மாடல்” என்றும், அவர் கடுமையாக திமுக ஆட்சியை விமர்சனம் செய்தார். 

மேலும், “முதல்வர் எதற்கெடுத்தாலும் நடித்து வருகிறார் என்றும், காவல் நிலையத்தில் தீடீர் ஆய்வின் போது எப்படி ஆளுங்கட்சி கேமரா மட்டும் செல்கிறது என தெரியவில்லை” என்றும், அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “வருகின்ற காலம் பாஜகவின் காலம் என்றும், 400 எம்.பி.க்களை பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்றும், தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் வெற்றி பெற்று டெல்லி செல்ல இருப்பதாகவும்” அண்ணாமலை குறிப்பிட்டார்.

முக்கியமாக, “ `பதுங்குவது பாய்வதற்கு’ என்று டயலாக் பேசியே 1967 ஆம் ஆண்டு இருந்து கட்சி நடத்திக்கொண்டுள்ளனர் என்றும்,  தமிழகத்தில் புதிதாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்ற சொல் தொடர்ந்து கேட்கும் நிலை உள்ளது” என்றும், தமிழக அரசை அவர் விமர்சித்தார். 

“திமுக ஆட்சியில் குற்றவாளிகள் தைரியமாக வெளியில் வந்து குற்றங்களை செய்து வருகின்றனர் என்றும், பாலியல் வன்கொடுமை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என்பது எல்லாம் தற்போது தொடர் கதையாகி வருகிறது” என்றும், அவர் மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

“தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல் நிலையங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் கட்ட பஞ்சாயத்து செய்வதும் அதிகரித்து வருகிறது” என்றும், அண்ணாமைலை குற்றம்சாட்டினார்.

“ இவை மட்டுமின்றி, திமுக வின் அமைச்சர்கள் ஊழலிலும் ஈடுபடுகின்றனர் என்றும், உதாரணத்துக்கு பணத்தை வாங்கி கொண்டு அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளை பணி மாற்றம் வழங்கி வருகிறார்” என்றும், பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார். 

அதே போல், “இன்னொரு பக்கம் அமைச்சர் பிடிஆர், அவரிடம் பேசினாலே உடனே அவர் நான் யார் தெரியுமா? என் தாத்தா யார்?  என் முப்பாட்டானார் யார் தெரியுமா? என்று பேசுகிறார் என்றும், சோலார் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக மின்சாரத்துறை அமைச்சர் வாங்குகிறார்” என்றும், மிக கடுமையாக அவர் விசமர்சனம் செய்தார்.

குறிப்பாக, “தமிழக அமைச்சர் சேகர் பாபு, என்றைக்கு ஆதீனத்தை தவறாக பேச ஆரம்பித்தாரோ, அன்றைக்கு கதை காலியாக போகிறது என்று, அர்த்தமாகிவிட்டது” என்றும், அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

“ஆர்.எஸ்.பாரதி, என் ஜாதக கட்டம் குறித்தெல்லாம் பேசுகிறார் என்றும், கடவுள் நம்பிக்கையற்ற திமுக அமைச்சர்களுக்கு கடவுள் மீது, ஜாதகம் மீது என்ன தீடீர் அக்கறை?” என்றும், அவர் விளாசினார். 

“கோயில் பணம் மீது திமுகவுக்கு ஒரு கண் உள்ளது என்றும், சாமிக்கு பின்வரும் உண்டியல் மீது திமுகவுக்கு கண் என மதுரை ஆதீனம் பேசியதில் எந்த தவறும் இல்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

மிக முக்கியமாக, “நீங்கள் ஆதீனத்தை மட்டும் தொட்டுப் பாருங்கள். பின் மதுரை மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பாருங்கள், அதன் பிறகு பாஜக செய்வதை பாருங்கள், அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி செய்வதையும் 3 வதாக பாருங்கள்” என்றும், தமிழக அரசுக்கு அண்ணாமலை பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு, திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.